மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி எம். உதயகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த வாரம் மட்டும் 02 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இங்கு நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, சுகாதார அமைச்சும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து டிசம்பர் 8ஆம் திகதி முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினைப் பிரகடனப்படுத்தி, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.
மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் கடந்த வாரம் வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தில், பொலிஸார், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சோதனையின்போது, நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதி என்ற காரணத்தினால், பொதுமக்கள் தங்கள் சூழலைத் தூய்மைப்படுத்தி, நுளம்பு தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.