மககம, திரிவானகெட்டியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 76 வயதுடைய பெண்ணின் மரணம், திட்டமிட்ட ஒரு படுகொலை என்பது பிரேதப் பரிசோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், திரிவானகெட்டியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகக் காவல்துறை அவசரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அகலவத்தை காவல்துறையினர், சமையலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த லெட்சுமி (76) என்பவரின் உடலை மீட்டனர்.
களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல; ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியானது.
பெண்ணின் முகப்பகுதியில் பாரமான ஆயுதம் ஒன்றினால் பலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு மற்றும் மூளைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பலத்த காயங்களே மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.
தாக்குதலின் போது தலையின் பின்புறம் ஏதோ ஒரு கடினமான மேற்பரப்பில் பலமாக மோதியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மரணம் ஒரு படுகொலை என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொலையாளிகளை அடையாளம் காணவும், அவர்கள் தப்பிச் சென்ற திசையை அறியவும் அகலவத்தை காவல்துறையினர் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.