திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் முப்படைகளின் தலைவர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார். அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்தம் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அனர்த்தத்தின் போது கடற்படையினர் ஆற்றிய பங்கு மகத்தானது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, குறிப்பாக கலா ஓயாவில் கூரை மேல் மரண பயத்தை அனுபவித்த மக்களுக்கு நம்பிக்கை அளித்து, இழக்கப்படவிருந்த ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய கடற்படையினரின் பணியை நன்றியுடன் பாராட்டினார்.
அனர்த்த காலங்களில் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற, தமது உயிரைத் தியாகம் செய்த கடற்படை அதிகாரிகளை இதன்போது ஜனாதிபதி நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதில் கடற்படையினர் ஆற்றிய பங்களிப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.
ஜனாதிபதி, கடற்படைத் தளபதி மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அவர்களின் பதவிகளைப் பொறுத்து வெவ்வேறு பொறுப்புகள் இருந்தாலும், அந்தப் பொறுப்புகள் அனைத்தும் ஒரு நிலையான அரசுக்கு அவசியமானவை என்றும், அவற்றை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
எந்தவொரு தொழிலையும் அல்லது பொறுப்பையும் இரண்டாம் பட்சமாகக் கருதக்கூடாது என்றும், ஒவ்வொரு பொறுப்பையும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கும் பங்களிப்பின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியை வந்தடைந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடற்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
2024/03 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 08 அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 65ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 28 அதிகாரிகள் பயிற்சியை முடித்து வெளியேறிச் சென்றனர்.
பயிற்சி காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய இடைநிலை அதிகாரிகளுக்கு விருதுகளையும், அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்களுக்குக் கௌரவச் சின்னமாகக் வாள்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

