பாராளுமன்ற சபையில் பெண் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த வியாழக்கிழமை (05) சபாநாயகரைச் சந்தித்து விசேட மனு ஒன்றைச் சமர்ப்பித்தது.
இலங்கையின் 10-வது பாராளுமன்றமானது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட சபையாகத் திகழ்கிறது.
செம்மஞ்சள் தினம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், சபைக்குள் பெண் உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக உள்ளதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான அவமதிப்புகள் தனிநபர்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்தப் பெண்களின் அரசியல் பங்கேற்பையும், அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தக் கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
பாராளுமன்றத்தில் ஒழுக்கம் (Order in the House) எனும் பிரிவின் கீழ், பெண் உறுப்பினர்களை வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்தப் புதிய கட்டளைகளைச் சேர்த்தல்.
ஆண் உறுப்பினர்கள் மட்டுமன்றி, பெண் உறுப்பினர்களும் மற்றுமொரு பெண் உறுப்பினரை அவமதிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிகள் அமைய வேண்டும்.
அரசியல் களத்தில் பெண்களுக்கு இது ஒரு பாதகமான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கடுமையான சட்ட ஒழுங்குகள் அவசியம்.
மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையில், பெண் உறுப்பினர்கள் அச்சமின்றித் தங்களது கடமைகளை ஆற்றுவதை உறுதிப்படுத்தச் சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.