இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச் சிக்கல்கள் நிலவி வருவதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க இன்று (14) தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சீனா போன்ற நாடுகள் சுமார் 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கிச் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதைப் போன்று, இலங்கையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில் இலவச விசா வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகச் சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, முந்தைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனமொன்றிற்கு (VFS Global) ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தடையாக உருவெடுத்துள்ளது.
விசா வழங்கும் பணிகளைத் தனியார் மயமாக்கியமை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்குச் சரியாகச் சேராமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் (Fundamental Rights Petitions) தற்போது முக்கியத் தடையாக உள்ளன. இந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக இழுபறியில் உள்ளதால், புதிய இலவச விசா கொள்கைகளைச் சட்டரீதியாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
தற்போது இந்தச் சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு நகர்வு மனுவைத் (Motion) தாக்கல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் விசா நடைமுறையில் உள்ள சட்டச் சிக்கல்களை நீக்கி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

