லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்த நிலையில், இந்த இரு வார காலப்பகுதிக்குள் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது தவிர, தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,105 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலியானவர்களில் 66 பெண்கள் மற்றும் 107 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 32 மருத்துவப் பணியாளர்களும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களின் எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனப் பாகுபாடு காட்டப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல வைத்தியசாலைகள் சேதமடைந்தும், அச்சுறுத்தல்கள் காரணமாகவும் மூடப்பட்டுள்ளன. தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறி வருகின்றனர், இது அந்நாட்டில் ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச சமூகம் இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் தாக்குதல்கள் குறையவில்லை. லெபனானின் பிரதான நகரங்களையும் தலைநகர் பெய்ரூட்டின் சில பகுதிகளையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.