மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த கொத்மலை, தவலந்தன்ன – ரம்பொடை வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை, மாற்று இடமொன்றில் தற்காலிகமாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி இது குறித்துத் தெரிவிக்கையில், குறித்த பாடசாலையை கொத்மலை, தவலந்தன்ன பகுதியில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் தற்காலிகமாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ரம்பொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு பாடசாலைக்கு மிக அருகிலேயே ஆரம்பமாகியுள்ளது. பாடசாலைக்குச் செல்லும் வீதியின் பல இடங்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிரிழப்பு அச்சத்தைப் போக்கவும், அவர்களின் மனநிலையினைச் சீர்செய்யவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் 143 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையில் உள்ளனர்.
தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் போதுமான இடவசதி காணப்படுவதால், அங்கு வகுப்பறைகளை அமைப்பதற்கான பணிகளைக் கொத்மலை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் சில நாட்களில் இந்தப் புதிய இடத்தில் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

