நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம் சீர்குலைந்து நாடு பாரதூரமான அராஜக நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கடந்த ஒரு வருடமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரே கடமையாற்றி வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் முடங்கியுள்ளது.
அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தர்மப்பிரிய கம்மன்பிலவின் பெயரைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். மாறாக, தகுதி குறைந்தவர்களின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பி வைத்ததால் அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பொதுக் கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆகியவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
முறையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை மற்றும் அதனால் ஏற்படும் நிதிச் சீர்கேடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.