கிரிஷ் (Krish) நிறுவன ஒப்பந்தம் தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 16-ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட்’ வழங்கிய 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மீது சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகோடா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நியாயமான விசாரணையை உறுதிப்படுத்தும் நோக்கில், முந்தைய விசாரணைகளின் போது கோரப்பட்ட பல முக்கிய ஆவணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்று பிரதிவாதி தரப்பிடம் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

