கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

13

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா வரும் பிப்ரவரி 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் யாழ் மறைமாவட்ட குருக்கள் கலந்துகொண்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

இந்த ஆண்டு திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தலா 4,000 பேர் என மொத்தம் 8,000 பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 4:00 மணிக்குத் திருவிழாக் கொடியேற்றத்துடன் தொடங்கி, சிலுவைப் பாதை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். மறுநாள் பிப்ரவரி 28 காலை 7:30 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் மற்றும் இந்தியக் குருக்கள் இணைந்து நடத்தும் கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விசைப்படகுகள் மூலம் கச்சதீவுக்கு வருகை தரவுள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், தங்குமிடக் கூடாரங்கள், சுகாதாரம் மற்றும் கழிவறை வசதிகளை இலங்கை கடற்படை முன்னின்று கவனித்து வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை விசேட பேருந்து சேவைகளும், அங்கிருந்து கச்சதீவுக்குப் படகுச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தீவுப் பகுதியில் சமைப்பது, மதுபானம் அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட மருத்துவ முகாம்களும், கடற்படையின் உயிர் காக்கும் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version