கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு
கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று நான் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் கடற்றொழில் சமுதாய சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்தேன்.
அவர்களின் நிலையை பார்த்து மிகுந்த இரக்கம் கொள்கிறேன்.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட அநியாய ஒப்பந்தமே காரணம்.
கச்சதீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டதற்கும் அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம்.
அன்றிலிருந்து இன்று வரை கடற்றொழிலாளர் சமுதாயம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயற்பட்டு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக, தமிழக அரசு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.