இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில், குறிப்பாக ஜப்பானிய சந்தையில் வலுப்படுத்தும் நோக்கில், 11 பேர் கொண்ட ஜப்பானிய விசேட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான ‘Connaissance De Ceylan’ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம், இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்தத் தூதுக்குழுவின் விஜயமானது வெறும் சுற்றுலா மேம்பாட்டோடு மாத்திரம் மட்டுப்படாமல், இலங்கையின் ஆழமான கலாசார மற்றும் வரலாற்று விழுமியங்களை ஆய்வு செய்வதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் வரலாறு மற்றும் பௌத்த மதத்தின் தாக்கம், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைகள், தனித்துவமான கலாசார சடங்குகள், உணவு முறைகள் மற்றும் நாட்டின் பொருளாதார ரீதியான பயிர்கள் குறித்து இந்தக்குழுவினர் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இந்த அனுபவங்களை ஜப்பானிய மக்களிடையே கொண்டு சென்று, இலங்கையை அவர்களது விருப்பத்திற்குரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகத் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.
ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு விசேட ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் கலாசாரப் பாரம்பரியங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறான திட்டங்கள் அமைய வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்தனர். ஜப்பானிய சந்தையில் இலங்கையை ஒரு முதன்மையான சுற்றுலா மையமாக முன்னிறுத்துவதற்கான வழிகள் குறித்தும் இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, இந்தத் தூதுக்குழுவினர் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் (Port City) ஆகிய இடங்களுக்கும் நேரில் விஜயம் செய்தனர். இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்று மற்றும் இயற்கை அழகை நேரில் கண்டறிந்த இவர்கள், இங்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.