யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“தையிட்டி எங்கள் சொத்து – எமது காணிகளை அபகரிக்காதே” என மாணவர்கள் முழக்கமிட்டதோடு, தனியார் காணிகளில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
காவல்துறை அடக்குமுறை: தையிட்டியில் நேற்று (21) இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் போது, பொலிஸார் நடந்துகொண்ட விதம் “காட்டுமிரண்டித்தனமானது” என மாணவர்கள் சாடினர்.
அமைதி வழியில் போராடியவர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரினர்.
பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நில ஆக்கிரமிப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.