யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

01 19

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி, தனங்கிளப்பு – அறுகுவெளிப் பகுதியில் உள்ள பற்றை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அரியாலை, புங்கன்குளம் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றிய தகவல்கள் எதுவுமின்றி மாயமாகியிருந்த நிலையில், இன்று (மார்ச் 21, 2026) இந்தப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் திலீபன் தயாளினியின் கணவர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, சடலம் மறைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது என்பதால், பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தார். சடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளரின் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கல்விப் புலத்தில் நன்மதிப்பைப் பெற்ற ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் இவ்வாறான முறையில் சடலமாக மீட்கப்பட்டமை யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான சந்தேகநபரிடம் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்த விபரங்கள் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version