காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் முழுமையாக வெளியேறப்போவதில்லை என்றும், அங்கு நிரந்தர இராணுவ நிலைகள் அமைக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் படி முழுமையாக வாபஸ் பெறுவதாக முன்னர் இணங்கியிருந்தாலும், பாதுகாப்பு கருதி காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்படும். குறிப்பாக, வடக்கு காசாவில் ‘நஹல்’ (Nahal) எனப்படும் காலாட்படை படையணியின் புறக்காவல் நிலையங்கள் நிறுவப்படும்.
காசாவில் மீண்டும் சிவில் குடியேற்றங்களை அமைக்கும் திட்டமில்லை என அவர் கூறினாலும், மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை அவர் ஊக்கப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் அதிருப்தி: இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகள் இதற்கு அதிருப்தி வெளியிட்டு விளக்கம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இவை பாதுகாப்புக்கான புறக்காவல் நிலையங்கள் மட்டுமே என காட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்குக் கரையில் உள்ள பெயித் எல் பகுதியில் 1,200 புதிய வீட்டு அலகுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வில் பேசிய அவர், நெதன்யாகுவின் அரசாங்கம் ஒரு “குடியேற்ற அரசு” என்றும், நீண்ட காலமாக இல்லாத வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறைமையை நிலைநிறுத்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.
அக்டோபரில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், ரபாவின் மவாசி பகுதி மற்றும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 400-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் மற்றும் குடியேறிகளின் வன்முறையால் 1,100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 11,000 பேர் காயமடைந்துள்ளதோடு, 21,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சட்டங்களின்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றங்களை அமைப்பது போர்க்குற்றமாகக் கருதப்படும் நிலையில், இஸ்ரேலின் இந்த நகர்வுகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அந்நாட்டுத் தேர்தலில் முக்கிய அரசியல் விவகாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.