இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனான் எல்லையைக் கடந்து தரைவழியாக முன்னேறி வருவதாக லெபனான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேசச் செய்திகள் வெளியாகியுள்ளன. எல்லையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியாம் (Khiam) நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துள்ளதோடு, அந்த நகரை இலக்கு வைத்துத் தீவிர எறிகணைத் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்பினரின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தவும், ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியத் தரப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படையினரின் இந்தத் திடீர் தரைவழி ஊடுருவலைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லெபனான் இராணுவத்தினர் அங்கிருந்து பின்வாங்கியுள்ளனர். அவர்கள் எல்லைப் பகுதிகளில் இருந்து உட்பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேலியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ஹிஸ்புல்லா அமைப்பினர் பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால் எல்லையோரக் கிராமங்களில் கடும் போர் மூண்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரானின் முக்கிய தலைவரான மொஜ்தாபா கமேனி, இஸ்ரேலியத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாக ரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானியத் தலைமைத்துவத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், போரை மற்றொரு கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன.
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது லெபனானுக்குள் இஸ்ரேல் தரைவழியாக நுழைந்துள்ளமை, இந்தப் போர் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தழுவிய ஒரு பாரிய மோதலாக உருவெடுக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் நிலையிலும், மோதல்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தற்போதைய ஊடுருவல் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.