ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் (Katz) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். எனினும், லாரிஜானியின் உயிரிழப்பு குறித்து ஈரானிய அரசாங்கம் இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்தப் போரில் பலியான மிக உயர்மட்ட அரசியல் பிரமுகராக அலி லாரிஜானி இருப்பார். ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும், நாடாளுமன்ற சபாநாயகராகவும் நீண்டகாலம் பணியாற்றிய லாரிஜானி, ஈரானிய அரசியல் கட்டமைப்பில் மிக முக்கியமான ஆளுமையாவார்.
லாரிஜானி கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்ற ‘அல்-குத்ஸ் தின’ பேரணியில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பொதுவெளியில் காணப்பட்டார்.
அலி லாரிஜானி மட்டுமன்றி, ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் துணை இராணுவப் பிரிவான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி குலாம் ரேசா சுலைமானியும் (Gholam Reza Soleimani) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.“தெஹ்ரானின் மையப்பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில், கடந்த ஆறு ஆண்டுகளாக பசிஜ் பிரிவின் தளபதியாக இருந்த குலாம் ரேசா சுலைமானி கொல்லப்பட்டுள்ளார்.” என இஸ்ரேலிய இராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் அடுத்தடுத்து குறிவைக்கப்படுவது, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது குறித்த அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.