ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை! – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடி!

23 6482c5544cb0e

நாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்களால் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இந்த நிலைமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு முகாமைத்துவம் செய்யும் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரேகொட மற்றும் ஜிந்துபிட்டி பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அரசியல் ரீதியானவை அல்ல, மாறாக அவை பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். “பாதாள உலகம் நூறு சதவீதம் ஒடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவதை, முழு இராணுவத்தையுமே கொழும்பில் இறக்கினாலும் கூடத் தடுத்து நிறுத்திவிட முடியாது” என அவர் யதார்த்தமான நிலையை விளக்கினார்.

கடந்த காலங்களில் இனவாதத்தைத் தூண்டி, கலகங்களை விளைவித்த சில குழுக்கள், மீண்டும் ஒரு பிம்பத்தை உருவாக்க இத்தகைய செயல்களில் ஈடுபடலாம் என அவர் எச்சரித்தார். எனினும், முப்படையினர் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசாங்கம் இந்தச் சவாலைச் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “சிறு சம்பவங்களுக்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை, ஆனால் அரசாங்கம் ஏதேனும் ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

 

 

Exit mobile version