‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தக் கொலையைத் திட்டமிடப் பயன்படுத்திய கைப்பேசி ஒன்று கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைப்பேசி மூலம் முக்கியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதன் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைச் சம்பவத்திற்காகத் தான் எந்தவித பணமும் பெறவில்லை என்று இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு வேறு வங்கிக் கணக்குகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தலைமறைவுக்கு உதவியவர்கள்:
சஞ்ஜீவ கொலைக்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி வெலிபென்ன பகுதிக்குச் சென்று, ஒரு காவல்துறை அதிகாரியின் அத்தையின் வீட்டில் தங்கியுள்ளார். விசாரணைகளில், அந்தக் காவல்துறை அதிகாரியின் மைத்துனர் மதுகம ஷானின் உதவியாளர் என்றும், அவரது வேண்டுகோளின் பேரில் செவ்வந்தி தங்க வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிறகு, இஷாரா தொடங்கொட பகுதியில் உள்ள மதுகம ஷானின் தோழி ஒருவருக்குச் சொந்தமான வீட்டிற்குச் சென்று, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் செவ்வந்தியை நேரில் அழைத்துச் சென்று அவர் பதுங்கியிருந்த வெலிபென்ன மற்றும் தொடங்கொட பகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளனர். தொடங்கொட வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது, செவ்வந்தி அதற்குள் மாத்தறை பகுதிக்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், தொடங்கொட வீட்டில் தங்கியிருந்தபோது இஷாரா மதுகம உட்பட பல பகுதிகளுக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளமையும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.