ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் வடகிழக்கு வளாகத்தில் உள்ள இயற்பியல் துறை கட்டிடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலானது ஈரானின் அறிவியல் கட்டமைப்பைச் சிதைக்கும் முயற்சி என ஈரான் வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.
ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள IRGC-இன் அறிக்கையில், மேற்காசியப் பிராந்தியத்தில் இயங்கி வரும் அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களும் இனி ஈரானின் “சட்டபூர்வமான இலக்குகளாக” (Legitimate Targets) கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இயங்கும் அமெரிக்கப் பல்கலைக்கழக கிளைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் இரண்டு முக்கிய கல்வி நிறுவனங்களைத் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இந்தத் தாக்குதல் அபாயம் குறித்து எச்சரித்துள்ள IRGC, இலக்காகக் கூடிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுமாறு கோரியுள்ளது. தாக்குதல் நடத்தப்படும் போது உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பல்கலைக்கழக வளாகங்களிலிருந்து குறைந்தது 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் போர்க்களமாக மாற்றப்படுவது சர்வதேச மட்டத்தில் பெரும் கவலையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கையில் (Ultimatum), தெஹ்ரான் நேரப்படி வரும் திங்கட்கிழமை (மார்ச் 30, 2026) நண்பகல் 12 மணிக்குள் அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை உத்தியோகபூர்வமாகக் கண்டிக்க வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. அவ்வாறு கண்டிக்கத் தவறினால், தனது எச்சரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாக IRGC சூளுரைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர் தற்போது கல்வி நிலையங்களை நோக்கியும் விரிவடைந்துள்ளது பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

