அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

01 28

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. ஈரானிய கூட்டுப் படைத் தளபதியின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி (Ibrahim Solfakhari) இதனைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி போன்றவர்களுடன் ஈரான் ஒருபோதும் இணக்கமாகச் செயல்பட முடியாது எனவும், அவருடன் எவ்விதமான இராஜதந்திர கொடுக்கல் வாங்கல்களையும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கருத்துத் தெரிவித்த சோல்ஃபகாரி, “உலகில் உண்மை மற்றும் பொய் என இரண்டு விடயங்கள் மட்டுமே உள்ளன; எது சரியானது என்பது உலகிற்குத் தெரியும்” எனத் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படும் சூழலிலும், ஈரான் மீது இரண்டு முறை பாரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை அவர் ஆதாரங்களுடன் முன்வைத்தார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என ஈரானியத் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் இந்த அமைதித் திட்ட அறிவிப்புகளுக்கு மத்தியிலும், போர்க்களத்தில் பதற்றம் தணியவில்லை எனத் தெரியவருகிறது. நேற்று (மார்ச் 24) இரவு ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் எந்தவிதக் குறைவும் ஏற்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அமெரிக்கா கூறிவரும் வேளையில், மறுபுறம் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Exit mobile version