இலங்கை கடற்பரப்பில் பலியான 84 ஈரானிய வீரர்கள்: தெஹ்ரானில் மாபெரும் இறுதிச் சடங்கிற்கு ஜனாதிபதி அழைப்பு!

15 16

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெஹ்ரான் மக்களுக்கு உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் IRIS Dena கப்பல், அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கடிக்கப்பட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன.

பலியான வீரர்களின் உடலங்கள் அண்மையில் இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் ஈரானுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஜனாதிபதி பெசெஷ்கியன், “ஒவ்வொரு தியாகியின் நிழலிலும் ஆயிரக்கணக்கான வீரம் மிக்க வீரர்கள் உருவாவார்கள் என்பதை ஈரானின் எதிரிகள் அறிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இது ஈரானின் இராணுவ மனவுறுதி குறையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உயிரிழந்த வீரர்களுக்கு உயரிய கௌரவம் அளிக்கும் வகையில், தலைநகர் தெஹ்ரானின் 34 பிரதான சதுக்கங்களில் அவர்களின் உடலங்கள் அடங்கிய பேழைகள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், இந்த நிகழ்வு ஈரானியர்களின் தேசிய ஒருமைப்பாட்டை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானியக் கடற்படை கப்பல் மீதான இந்தத் தாக்குதல், பிராந்திய வான் மற்றும் கடல் எல்லையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் இச்சம்பவம் நடந்திருப்பது சர்வதேச நாடுகளின் அவதானத்தைப் பெற்றுள்ளது. தியாகிகளாகப் போற்றப்படும் இந்த வீரர்களின் இறுதிச் சடங்கு, ஈரானின் அடுத்தகட்ட இராணுவ நகர்வுகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version