போரின் விளிம்பில் ஈரான்: ரியால் வரலாறு காணாத வீழ்ச்சி – மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிப்பு!

5bb31f57 563f 403c 81e7 2b351f640391 16x9 1200x676

ஈரானின் தேசிய நாணயமான ரியால் (Rial), அமெரிக்க டொலருக்கு நிகராக 1.5 மில்லியன் என்ற அதலபாதாள நிலையை எட்டியுள்ள நிலையில், நாடு பாரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக கடந்த டிசம்பர் 28 அன்று தொடங்கிய மக்கள் போராட்டங்கள் தற்போது ஈரானின் 1979-ஆம் ஆண்டு புரட்சிக்கு இணையான கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளன.

மனித உரிமை அமைப்புகளின் தரவுப்படி, 86 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 6,126 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அரசு இந்த எண்ணிக்கையை 3,117 என மறுத்து வருகின்றது.

போராட்டங்களுடன் தொடர்புடைய 41,800-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்களை ஒடுக்க ஈரானிய வரலாற்றிலேயே நீண்ட காலமான இரண்டு வாரங்களுக்கு மேலாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

அமைதிப் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரானைத் தாக்குவதற்கான தயார் நிலையில், அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் ஏற்கனவே பலவீனமடைந்துள்ளன.

சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சி மற்றும் ஹிஸ்புல்லா குழுவின் தடுமாற்றம் காரணமாக ஈரானின் ‘எதிர்ப்பு அச்சு’ (Axis of Resistance) நிலைகுலைந்துள்ளது. எனினும், ஈராக்கின் ‘கதாயிப் ஹிஸ்புல்லா’ மற்றும் யேமனின் ‘ஹூதி’ கிளர்ச்சியாளர்கள், எதிரிகளுக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச இராணுவ அழுத்தங்கள் காரணமாக ஈரான் தற்போது ஒரு பாரிய போரின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

 

Exit mobile version