மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் முழுவதும் கடந்த ஆறு நாட்களாக இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 28 அன்று தாக்குதல்கள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாட்டின் இணையக் கட்டமைப்பு சிதைக்கப்பட்ட நிலையில், தற்போது இணையப் பயன்பாடு அதன் சாதாரண அளவில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக இணையக் கண்காணிப்பு அமைப்பான ‘நெட் பிளாக்ஸ்’ (NetBlocks) தெரிவித்துள்ளது. இதனால் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களின் உறவினர்களுடனோ அல்லது உள்நாட்டில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவோ முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த இணைய முடக்கம் ஈரானிய அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது இஸ்ரேலிய சைபர் தாக்குதல்களால் ஏற்பட்டதா என்ற விவாதம் எழுந்துள்ளது. எனினும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும், போர்ச் செய்திகள் பரவுவதைத் தவிர்க்கவும் ஈரான் அரசாங்கமே இந்த “கில் சுவிட்ச்” (Kill Switch) எனப்படும் முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தங்கள் மற்றும் போர் விமானங்களின் இரைச்சல்களுக்கு மத்தியில் வாழும் ஈரானிய மக்கள், “நாங்கள் எதைப்பற்றியும் அறியாமல் இருளில் தள்ளப்பட்டுள்ளோம்” எனச் சர்வதேச ஊடகங்களுக்குத் தங்களின் வேதனையைத் தெரிவித்துள்ளனர்.
இணைய முடக்கத்தால் ஈரானின் பொருளாதாரம் மற்றும் தினசரி சேவைகள் முடங்கியுள்ளன. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் 80 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், போக்குவரத்து மற்றும் மருத்துவச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் பயன்படுத்தும் ‘பாடேசாபா’ (BadeSaba) என்ற தொழுகை நேர செயலியை (Prayer App) ஹேக் செய்த மர்ம நபர்கள், ஈரானிய இராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுமாறு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இத்தகைய சைபர் ஊடுருவல்கள் மக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானின் இந்தத் தகவல் முடக்கம் மனிதாபிமான நெருக்கடியை மறைக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் குறித்த உண்மையான தகவல்கள் உலகிற்குத் தெரியாமல் போவதைத் தடுக்க, உடனடியாக இணையச் சேவைகளை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தகவல் தொடர்பின்றித் தவிக்கும் ஈரானிய மக்களின் நிலை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.