ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான் படைகள் முன்கூட்டியே அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) ஆகியன இணைந்து இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் செயற்படும் இந்தக் குழுக்கள், ஈரானுக்குள் ஊடுருவிப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, பிரிவினைவாதக் குழுக்களின் முக்கிய நிலைகள் மற்றும் அவர்களது பயிற்சி முகாம்கள் ஈரான் படைகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்குப் பாரிய உயிர்ச்சேதங்களும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய மண்ணைத் தாக்கத் திட்டமிடும் வெளிநாட்டுச் சதித் திட்டங்களை முறியடிக்க, குர்திஷ் மக்களுடன் ஈரானியப் படைகள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஈரான் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அண்டை நாடான ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஈரான் எதிர்ப்புப் பிரிவினைவாதப் படைகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஈரானின் பிரஸ் தொலைக்காட்சியை (Press TV) மேற்கோட்காட்டி அல்ஜெஸீரா வெளியிட்டுள்ள செய்தியில், ஈராக் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களின் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் நடவடிக்கை எல்லையோரப் பகுதிகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான நேரடி மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஈரான் தனது மேற்கு எல்லைகளில் பாதுகாப்பை இருமடங்காக அதிகரித்துள்ளது. இது பிராந்தியத்தில் ஒரு பெரிய அளவிலான தரைப்போர் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

