மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்ஷிவன் (Nakhchivan) தன்னாட்சிப் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் இன்று (05.03.2026) பகல் 12 மணியளவில் அதிரடி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை ஈரானிய மண்ணிலிருந்தே அந்நாட்டுப் படைகள் முன்னெடுத்ததாக அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதனை ஒரு “பயங்கரவாதச் செயல்” எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
தாக்குதலின் விபரங்களின்படி, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு ட்ரோன் நக்ஷிவன் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் (Terminal) கட்டிடத்தின் மீது மோதி வெடித்துள்ளது. மற்றொரு ட்ரோன் ஷகராபாத் (Shakarabad) கிராமத்தில் உள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் விழுந்து வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அங்கு கரும்புகை கிளம்புவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தேசிய பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். “ஈரான் எமது நாட்டின் மீது தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது; இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க எமது இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஈரானிய இராணுவம் இந்தத் தாக்குதலைத் தாம் நடத்தவில்லை என மறுத்துள்ளதுடன், இஸ்ரேலிய உளவு அமைப்புகளே ஈரானைப் பழிவாங்கும் நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அஸர்பைஜான் நாடு இஸ்ரேலுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளைக் கொண்டிருப்பதாலும், அங்கிருந்து இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் ஈரானைக் கண்காணிப்பதாலும் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகைமை நிலவி வருகிறது. நக்ஷிவன் பிராந்தியம் ஈரான், துருக்கி மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு முக்கிய மூலோபாயப் பகுதியாகும். இந்தத் தாக்குதலால் காகசஸ் (Caucasus) பிராந்தியத்திலும் போர் பரவக்கூடும் என்ற அச்சம் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளது.

