ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து, அந்த நாட்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இணைய முடக்கம் (Internet Blackout) இன்று (மார்ச் 22, 2026) 23-ஆவது நாளை எட்டியுள்ளது. சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பான ‘நெட் பிளாக்ஸ்’ (NetBlocks) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, பிப்ரவரி 28 முதல் தற்போது வரை சுமார் 528 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஈரான் உலகிலிருந்து டிஜிட்டல் ரீதியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது ஈரான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட கால மற்றும் மிகக் கடுமையான இணைய முடக்கமாகும். இதற்கு முன்னர் 2019 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களின் போது விதிக்கப்பட்ட முடக்க காலத்தை விடவும், தற்போதைய முடக்கம் நீண்ட காலம் நீடித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இணைய இணைப்பானது சாதாரண அளவில் இருந்து 1 சதவீதத்திற்கும் குறைவான மட்டத்திற்குத் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், நாடு தற்போது போர் மற்றும் ஆக்கிரமிப்புச் சூழலை எதிர்கொண்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த நீண்ட கால முடக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வங்கிச் சேவைகள் மற்றும் அவசரத் தொடர்புத் தேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இணைய முடக்கத்தைப் பயன்படுத்திப் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் உண்மையான சேத விபரங்கள் மறைக்கப்படலாம் எனச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. ஸ்டார்லிங்க் (Starlink) போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதையும் ஈரான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாகக் கண்காணித்துத் தடுத்து வருகின்றன. 23 நாட்களாக நீடிக்கும் இந்த டிஜிட்டல் இருள், ஈரானியச் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பைப் பாரியளவில் சிதைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

