ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக உள்ளார்: வெளியுறவு அமைச்சர் தகவல்

22 12

ஈரானின் புதிய உச்ச தலைவராக கடந்த மார்ச் 8ஆம் திகதி பதவியேற்ற மொஜ்தபா கமேனி, பதவியேற்பிற்குப் பின்னர் பொதுவெளியில் தோன்றவில்லை என்பது சர்வதேச அளவில் பல்வேறு ஊகங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அவர் “நல்ல ஆரோக்கியத்துடன்” இருப்பதாகவும், நாட்டின் தற்போதைய சூழலை அவர் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தத் தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனியின் முதலாவது பொது உரை, மார்ச் 12ஆம் திகதி அரசு ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், அது நேரடியாக ஒளிபரப்பப்படாமல், ஒரு தொகுப்பாளரால் வாசிக்கப்பட்டதே பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்தது. இவ்வாறான சூழலிலேயே, வெளியுறவு அமைச்சர் அவரது உடல்நிலை குறித்த விளக்கத்தை வழங்கியுள்ளார். அவர் பொதுவெளியில் தோன்றாதது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை ஈரானிய அரசு மௌனமாகவே அணுகி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அராக்சி, அந்த நீரிணை ஊடாகப் பயணிக்கும் உரிமையை ஈரான் மீள்வரையறை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். “ஹோர்முஸ் நீரிணை அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளைத் தவிர, உலகின் மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் தொடர்ந்து திறந்திருக்கும்” என்று அவர் அறிவித்துள்ளார். பிராந்தியப் பாதுகாப்பில் ஈரான் கொண்டுள்ள இந்த இறுக்கமான நிலைப்பாடு, மத்திய கிழக்கு அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு பிராந்திய முயற்சிக்கும் ஈரான் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் அராக்சி மேலும் கூறினார். எவ்வாறாயினும், “தற்போதைய போரை நிறுத்துவதற்கு இதுவரை உறுதியான எந்தவொரு குறிப்பிட்ட முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை” என்பதையும் அவர் கசப்பான உண்மையுடன் ஒப்புக்கொண்டார். போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், ஈரான் தனது வெளியுறவுக் கொள்கையில் தொடர்ந்து கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பதை அமைச்சர் அராக்சியின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

Exit mobile version