ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil Tankers) அந்த நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்தியா மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இந்த அனுமதி இந்தியாவிற்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், இவ்வாறான எந்தவொரு உத்தியோகபூர்வ ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என ஈரானிய தரப்பு மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய இணக்கப்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் போர்ச் சூழலில், கப்பல்களின் பாதுகாப்பு குறித்து உறுதியான உத்தரவாதங்கள் எதையும் வழங்க முடியாத நிலையில் ஈரான் உள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மிகுந்த நிச்சயமற்ற தன்மையிலேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த பிப்ரவரி இறுதியில் மோதல்கள் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு சில கப்பல்கள் ‘டார்க் மோட்’ (Dark Mode) எனப்படும் கண்காணிப்புத் தகவல்களை (AIS) அணைத்துவிட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த நீரிணையைக் கடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த ‘ஷென்லாங்’ (Shenlong) என்ற கப்பல், கடந்த நாட்களில் இவ்வாறு பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் கடல்வழிப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியிலான இந்தியக் கப்பல்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்தியா தொடர்ந்து இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்திய அரசாங்கம் தனது கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரமடைந்துள்ளதால், இந்தப் பிராந்தியத்திலான வர்த்தகப் பாதைகள் முழுமையாகச் சீரடைய நீண்ட காலம் எடுக்கும் என்றே அவதானிகள் கருதுகின்றனர்.