கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மேற்கொண்டு வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 1,332 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதுவர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஈரானிய செம்பிறை சங்கத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அவர் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பதுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்கள் குறித்து விரிவாக விளக்கிய தூதுவர், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் முழுவதும் சுமார் 3,600-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள், வணிக மையங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இந்தத் தாக்குதல்களால் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. இந்த மனிதாபிமான நெருக்கடியானது தற்போது பிராந்தியத்தின் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களையோ அல்லது பொதுக் கட்டமைப்புகளையோ வேண்டுமென்றே இலக்கு வைக்கும் கொள்கை தங்களுக்கு இல்லை என்று அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் தொடர்பாகத் தற்பொழுது விசாரணை நடத்தி வருவதாகவும் அமெரிக்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், ஈரானே தங்களது பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் பதிலுக்குக் குற்றம் சாட்டியுள்ளது.
பெப்ரவரி இறுதியில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களின் மறைவைத் தொடர்ந்து தொடங்கிய இந்த மோதல், தற்போது கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடிப் போர்நிறுத்தத்திற்கும், மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளன. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவ மற்றும் அத்தியாவசிய உதவிகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மனிதாபிமான நெருக்கடியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

