இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சிற்குச் சொந்தமான ATR 42-500 ரக விமானம் ஒன்று, இன்று (17) பிற்பகல் மகாசர் (Makassar) நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
இந்த விமானம் யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) தென் சுலவேசி மாகாணத்தின் மகாசர் நகரை நோக்கிப் பயணித்தது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கச் சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டது.
விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 11 பேர் இருந்துள்ளனர்.
மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் (Leang-Leang) மலைப்பகுதியில் இந்த விமானம் மாயமாகியுள்ளது.
விமானம் மாயமானதாகக் கூறப்படும் மலைப்பகுதியிலிருந்து கரும்புகை எழும்புவது போன்றும், விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது போன்றும் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், இவை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் (BASARNAS) மற்றும் காவல்துறையினர் இணைந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர தேடுதல் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது மீட்புக் குழுவினர் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியை நோக்கி விரைந்துள்ள நிலையில், விமானத்திலிருந்தவர்களின் நிலை குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

