இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. வட மொலுக்கா (North Molucca) கடற்பகுதியில் உள்ள டெர்னேட் (Ternate) கடற்கரைக்கு அப்பால், ரிக்டர் அளவில் 7.8 மெக்னிடியூட் தீவிரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா மற்றும் அதனை அண்மித்த பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு ஆழிப்பேரலை (Tsunami) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும், பாரிய அலைகள் எதுவும் ஏற்படாததையடுத்து, சுனாமி அபாயம் நீங்கியதாக அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது. நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு, உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பசிபிக் ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு உள்ளாகும் ஒரு நாடாகும். இன்றைய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பல சிறிய அதிர்வுகள் (Aftershocks) உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் மற்றும் சேத விபரங்களை மதிப்பிடும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

