இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவனம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக, ஆறு முக்கிய விமான நிலையங்களில் சரியான நேரத்தில் இயங்கும் செயல்திறன் (On-Time Performance) 8.5% ஆகக் குறைந்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விதித்த புதிய விமானப் பணிக் கால வரம்பு (FDTL) விதிமுறைகளை முறையாக அமல்படுத்தத் தவறியமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான விமானப் பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமானப் போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க வகையில், விமான நிலையச் செயல்பாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பி, நிலையான கால அட்டவணைக்குத் திரும்ப, அடுத்த வருடம் பிப்ரவரி 10ஆம் திகதி வரை ஆகலாம் என்று இண்டிகோ, அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது.