இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது ‘மனக்கசப்புடன் பணிபுரிதல்’ (Resenteeism) எனப்படும் ஒரு விசித்திரமான உளவியல் மாற்றம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 46 சதவீதமான இளைஞர்கள் அதீத வேலைப்பளு (Burnout) காரணமாக வேலையை விட்டு விலகத் திட்டமிடுகின்றனர். ஆனால், இந்தியாவில் நிலைமை மாறுபட்டுள்ளது. வேலையில்லாப் பிரச்சினை மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக, வேலையை விட்டு விலகுவது ஒரு சலுகையாகவே (Luxury) பார்க்கப்படுகிறது.
வேலையை விடுவது தோல்வியாகக் கருதப்படுவதால், பல இளைஞர்கள் விருப்பமில்லாத வேலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
உளவியலாளர் ரித்திகா குப்தா மற்றும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதன் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்வது, மேலதிக முயற்சிகளை எடுக்காமல் இருப்பது. நிறுவனத்தின் இலக்குகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.
“வேலை தங்களை நேசிக்கும்” என்ற நம்பிக்கையை அவர்கள் முழுமையாகக் கைவிட்டுள்ளனர்.
“இளம் பணியாளர்கள் கௌரவமான வேலை, நெகிழ்வுத்தன்மை (Flexibility) மற்றும் மன அமைதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நிறுவனங்கள் இன்னும் பழைய படிநிலை முறைகளையும், நீண்ட நேர வேலைகளையும் வலியுறுத்துகின்றன,” என பேராசிரியர் கலாநிதி உமேஷ் கோத்தாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறுவனங்களை விட்டு ஊழியர்கள் வெளியேறுவதை விட, அவர்கள் ஆர்வமின்றி நிறுவனத்தில் தங்கியிருப்பதே (Resenteeism) எதிர்கால உற்பத்தித்திறனுக்குப் பாரிய அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

