தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கிய பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உயர் ரக கஞ்சா விற்பனை செய்ததாக, ஆந்திரா விஜயநகரத்தைச் சேர்ந்த காடே ரேணுகா (28) என்ற பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா எல்லையிலிருந்து ‘ஷீலாவதி’ ரக கஞ்சாவை வாங்கி, நர்சிபட்டினம் வழியாகத் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்குக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான இவர், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒரு பெரும் கடத்தல் வலையமைப்பை உருவாக்கியுள்ளார்.
இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 கிலோ கஞ்சா, கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெங்களூரில் மூன்று போதைப்பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகளை மகாராஷ்டிரா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சோதனையில் ரூ. 55.88 கோடி மதிப்புள்ள 4 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 17 கிலோ இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்டை மாநில பொலிஸார் வந்து பெங்களூரில் தொழிற்சாலைகளைக் கண்டுபிடிப்பது, கர்நாடகப் பொலிஸாரின் மெத்தனத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மகாராஷ்டிரா பொலிஸாரின் தகவலை மறுத்துள்ளார்.
“பெங்களூரில் ரூ. 55.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்பது உண்மையில்லை. அங்கு ரூ. 1.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்கும் இரசாயனங்களே சிக்கின. இன்னும் போதைப்பொருள் தயாரிக்கப்படவில்லை,” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தற்போது தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.