இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று (மார்ச் 18) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குடியிருப்பு மற்றும் வணிக வளாகமாகச் செயல்பட்டு வந்த இந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால், மேலும் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பலியானதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டடத்தின் கீழ்த்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்திருந்த துணிக்கடை மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில ஏற்பட்ட மின் கசிவே (Short Circuit) இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தீப்பற்றியவுடன் வெளியேறும் வழி முழுவதும் நெருப்பால் சூழப்பட்டதால், கட்டடத்திற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். உயிருக்கு அஞ்சிச் சிலர் கட்டடத்தின் மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களின் நிலை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் இத்தகைய நெருக்கமான பகுதிகளில் அமைந்துள்ள வணிகக் கட்டடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியினை இந்த விபத்து மீண்டும் எழுப்பியுள்ளது.