தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 கிலோகிராம் வெடிபொருளின் ஒரு தொகுதி ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி டெல்லியில் செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பரிதாபாத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில் 3,000 கிலோகிராம் அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், வெடிபொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் தடயவியல் குழுவினர், பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 27க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.