இலங்கையில் ஒற்றையாட்சி முறையைத் திணிக்க எடுக்கும் முயற்சிகள், அடக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீண்டும் தூண்டிவிட வழிவகுக்கும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி (Federal) அமைப்பை உறுதி செய்ய வேண்டும். ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தங்கள் சிங்கள பெரும்பான்மைவாதத்தையே ஊக்குவிக்கும்.
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு-கிழக்கு இணைந்த சுயாட்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால், 13-வது திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே வைத்துள்ளது.
இரண்டு தேசிய இனங்கள் வாழும் நாட்டில் ஒரு தரப்பை ஒடுக்கும் நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை.
“விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தின் மூல காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நீடிக்கின்றன. சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும், இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தீங்கை விளைவிக்கும்.”
ஈழத் தமிழர்களிடையே காணப்படும் விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டாமல் இருக்க, முறையான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.