கடற்றொழில் அதிகாரிகளுக்கு இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்கள்: இந்திய அரசு நிதியுதவி!

22 13

இலங்கை கடற்றொழில் துறையில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களை (Electric Motorcycles) வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி உதவியை இந்திய அரசாங்கம் ஒரு முழுமையான மானியமாக (Grant) வழங்க முன்வந்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் கீழ் பணியாற்றும் 430 கள அதிகாரிகளுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. அதிகாரிகள் தமது கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதையும், எரிபொருள் சிக்கனத்தைப் பேணுவதையும் உறுதி செய்யவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் சுமார் 264.59 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்க இணங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்காகக் கடற்றொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச ரீதியாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், அரச அதிகாரிகளுக்குச் சூழல் நட்பு ரீதியான போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம் நீண்டகால எரிபொருள் சேமிப்பை உறுதி செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்தத் திட்டம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் மற்றொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version