சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்று இறங்கியமை தெரியவந்துள்ளது.
அவர் மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபரைக் கொண்டு, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகத்துக்குள் சென்றதற்கான காரணம் குறித்து மரைன் காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.