காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை என காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
காவல்துறை குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய விசேட அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவிற்கு காவல்துறை திணைக்களம் சார்பாகத் தேவையான ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதகமான தீர்வு எட்டப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை திணைக்களத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை குறித்து அதிர்ச்சியான தகவல்களை அவர் வெளியிட்டார்.
தற்போது இலங்கை காவல்துறையில் சுமார் 32,000 அதிகாரிகளுக்கு வெற்றிடம் நிலவுகிறது. இந்த வருடத்தில் 2,500 பேரும், அடுத்த வருடத்தில் 2,700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களின் ஓய்வைத் தடுக்க முடியாது என்பதால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் காவல்துறையில் புதிதாக 10,000 பேரைச் சேவையில் உள்வாங்குவதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.