பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, தான் அரசியலில் இருந்து விலகப்போவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, ஆந்திர மாநில அரசுக்கு எதிராக ரோஜா முன்வைக்கும் விமர்சனங்களைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அந்த அச்சத்தினால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் செய்திகள் பரவின.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் எப்போதெல்லாம் அரசை விமர்சிக்கிறேனோ, அப்போதெல்லாம் என்னைக் கைது செய்யப்போவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள். கைதுக்கு அஞ்சி நான் அரசியலை விட்டு விலகமாட்டேன். எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன்தான் அரசியலுக்கு வந்தேன்.”
“தற்போது நான் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதால் அரசியலை விட்டு விலகுவதாக நினைக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது கட்சிப் பதவியில் மட்டுமே இருப்பதால் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளேன்.”
“துணை முதல்வர் பவன் கல்யாண் அரசியலில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். அவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்,” என அவர் சாடியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பேச்சாளராக இருந்து வரும் ரோஜா, தற்போதைய ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது இந்த விளக்கம், அவர் தனது அரசியல் மற்றும் திரைப்பயணம் ஆகிய இரண்டையும் சமமாகத் தொடர்வார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.