இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இன்று (17) உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய குறித்த வெளிநாட்டுப் பயணி, தனது மனைவியுடன் பிதுரங்கலை பகுதியை நோக்கி நடைப்பயணமாகச் சென்று கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த தம்பதியினர் வனப்பகுதிக்கு அருகாமையிலுள்ள பாதையில் பயணித்த போது, அங்கிருந்த காட்டு யானை ஒன்று திடீரென அவர்களைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஹங்கேரி நாட்டுப் பயணியை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சீகிரியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவருடன் சென்ற அவரது மனைவி அதிர்ஷ்டவசமாகக் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.
சீகிரியா மற்றும் பிதுரங்கலை பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டிகளின் ஆலோசனையின்றித் தனிப்பட்ட முறையில் வனப்பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.