ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19 வயதுடைய மாணவனின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்பதாம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விருந்தின் போது, மாணவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியிருந்தது. இந்த மோதலைத் தொடர்ந்து குறித்த மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவருடன் மோதலில் ஈடுபட்ட அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த இளைஞர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் ஹோமாகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள போதிலும், விருந்து நடந்த இடத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

