தோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த மிரட்டலைத் தொடர்ந்து, இன்று (28) காலை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தோஹாவிலிருந்து 245 பயணிகளுடன் இன்று காலை 8.27 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம். குறித்த விமானத்திற்குள் நால்வர் வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தத் தயாராக இருப்பதாக விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்குச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் அது உடனடியாகப் பாதுகாப்பு முனையத்திற்கு (Isolation Bay) கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், பொலிஸ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் விமானத்தைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னர், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, இது ஒரு போலி மிரட்டல் என உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் குறித்த விமானம் பிற்பகல் 1.07 மணிக்கு மீண்டும் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
கடந்த 26 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்திற்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டலைப் போன்றே இதுவும் ஒரு திட்டமிட்ட போலி மிரட்டல் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களும் வெளிநாடொன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் இவ்வாறான சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

