டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று இரவு 7:00 மணிக்கு கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியும், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் களம் காணும் இந்தப் போட்டி, இரு அணிகளின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்துள்ளது.
]குழு B இன் கீழ் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு இன்றைய போட்டி மிக முக்கியமானது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில், இலங்கை அணி அதிகாரபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெறும். சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் களம் இறங்குவது இலங்கை அணிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், புள்ளிப்பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு இது ஒரு கட்டாய வெற்றிப் போட்டியாகும் (Must-win match). இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளதால், மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணி முழு பலத்தையும் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி பல்லேகலே மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். ஆசியக் கிண்ண வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் செயல்படுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

