வெனிசுலா மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறித் தப்ப முயன்ற ‘மரைனேரா’ (Marinera) என்ற எண்ணெய் கப்பலை, ஐஸ்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு இடைப்பட்ட அட்லாண்டிக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்கப் படைகள் இன்று (07) அதிரடியாகச் சிறைப்பிடித்துள்ளன.
‘பெல்லா 1’ (Bella 1) என்ற பெயரில் இயங்கி வந்த இந்தக் கப்பல், ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு எண்ணெய் கடத்தியதாக 2024-லேயே அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் வெனிசுலா கடற்கரை அருகே அமெரிக்கக் கடலோரக் காவல்படையினரிடம் சிக்காமல் தப்பிக்க, இந்தக் கப்பல் தனது பெயரை ‘மரைனேரா’ என மாற்றியதுடன், கப்பலின் பக்கவாட்டில் ரஷ்யக் கொடியைப் பூசி, தன்னை ஒரு ரஷ்யக் கப்பலாக அடையாளப்படுத்திக் கொண்டது.
சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் இந்தக் கப்பலை அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் ‘முன்ரோ’ (USCGC Munro) கப்பல் பின்தொடர்ந்து சென்றது.
அமெரிக்கக் கடற்படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர். இதற்குப் பிரித்தானியாவின் ரோயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) உளவு விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களும் (RFA Tideforce) உதவி வழங்கின.
ஸ்கொட்லாந்திற்கு வடக்கே நடுக்கடலில் வைத்து அமெரிக்கப் படைகள் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து (Boarding), அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறி ஒரு சிவிலியன் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது என ரஷ்ய வெளியுறவு மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அந்த நாட்டுடன் தொடர்புடைய ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “தடை செய்யப்பட்ட வெனிசுலா எண்ணெயைக் கடத்தும் எந்தக் கப்பலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் விடப்பட மாட்டாது” என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.