இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த உயர்மட்டக் குழு ஆலோசனை!

14 6

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே நிர்வகிப்பதற்கான ‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டமொன்று நேற்று (மார்ச் 6) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விவசாய அமைச்சர் கே. டி. லால் காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பைத் தடையின்றிப் பேணுவது மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, உலகளாவிய ரீதியில் விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடங்கல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினர். உணவுப் பொருட்களின் விலையில் தேவையற்ற ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முறையான கண்காணிப்பு அவசியமென வலியுறுத்தப்பட்டது.

உணவு உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறையின் தடையற்ற செயல்பாட்டிற்கு எரிபொருள் மிக முக்கியம் என்பதால், அந்தத் துறைகளுக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்கள் இறக்குமதியில் ஏதேனும் நாடுகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தால், அதைச் சமாளிப்பதற்கான மாற்று வழிகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் இக்குழு விரிவாகக் கலந்துரையாடியது.

இந்தக் கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதார மற்றும் உணவு இறக்குமதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே உணர்ந்து, மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version