மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் நேற்று (மார்ச் 24, 2026) ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த மருந்தகத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து, சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு இம்மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சாதாரண வாடிக்கையாளர்களைப் போலச் சென்று, மருத்துவப் பரிந்துரைச் சீட்டு இன்றிச் சம்பந்தப்பட்ட மருந்துகளைக் கோரிப் பெற்றுக்கொண்டதன் மூலம் இந்த மோசடியை உறுதிப்படுத்தினர். சோதனையின் போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1400 போதை மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் மனநலச் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய வீரியம் மிக்க மருந்துகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான மருந்துகள் பரவுவதைக் தடுக்கத் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஹட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.