அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புரூக்ளின் சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மான்ஹாட்டன் கொண்டு வரப்பட்ட மதுரோ, 92 வயது மூத்த நீதிபதி ஆல்வின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சிறை உடையில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் நொண்டியபடி வந்த மதுரோ, அதிகாரிகளுடன் சிரித்துப் பேசியபடி காணப்பட்டார்.
கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவைப் போதைப்பொருள் சந்தையாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்காப்புக்காக வாதிட வழக்கறிஞர்கள் எவரும் முன்வராத நிலையில், மதுரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மதுரோவின் 10 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.
தனது தந்தையின் கைது குறித்துப் பேசிய மதுரோவின் மகன் குரேரா, கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுடன் இருந்து கொண்டே சிலர் துரோகம் இழைத்துவிட்டனர். அந்தத் துரோகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். எனது தந்தையைக் கைது செய்த அமெரிக்காவை நாங்கள் கண்டிப்பாகப் பழிதீர்ப்போம்.”
இதற்கிடையில், திங்கட்கிழமை பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் சமரசப் போக்கைக் கையாண்டு வருகிறார். இது மதுரோவின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.